கூட்டுறவுத் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு
By dn erode | Published On : 30th March 2013 07:06 PM | Last Updated : 30th March 2013 07:06 PM | அ+அ அ- |

கூட்டுறவுத் தேர்தல் நியாயமான முறையில் நடக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
தமிழகத்தில் கூட்டுறவுச்சங்கங்களுக்கான முதல்கட்ட தேர்தலுக்காக வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆளும்கட்சி வேட்பாளர்களின் மனுக்களை மட்டும் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். பிற வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை நியாயமான காரணங்கள் இன்றி தள்ளுபடி செய்துள்ளனர்.ஏற்கெனவே கூட்டுறவுச்சங்கங்கள் அரசியல்வாதிகளின் கையில் இருந்ததால் கடந்த 10 ஆண்டுகளாக நலிவடைந்துவிட்டன. இப்போது மீண்டும் அரசியல்வாதிகளின் கைக்கு போனால் அனைத்து கூட்டுறவுச்சங்கங்களும் நலிந்துவிடும். எனவே, கூட்டுறவுச்சங்கங்களுக்கு நியாயமான முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.
பிரதமராக வேண்டும் என ஆசைப்படும் முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் ஜனநாயக ரீதியாக கூட்டுறவுத்தேர்தல் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க தீர்மானத்தை இந்தியா கடைசி வரை அமைதி காத்து ஆதரித்தது ராஜதந்திரம். நாட்டின் நலன் கருதி எடுக்கப்படும் ராஜதந்திர நடவடிக்கைகளை முன்கூட்டியே வெளிப்படுத்த முடியாது என்று கூறினார்.
முன்னதாக மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியபோது:
இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து வருகிறது. இலங்கையில் தமிழர் பகுதியில் 200 கி.மீ. தூரம் வரை ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சாலைகள், மருத்துவமனைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ராஜீவ்காந்தி உயிருடன் இருந்திருந்தால் எப்போதோ தமிழ் ஈழம் பிறந்திருக்கும். இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதிப்படையை இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து விடுதலைப்புலிகளும் தாக்கினர். இதனால்தான் தமிழ் ஈழக்கனவு தகர்ந்து போனது என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.எம்.பழனிச்சாமி (தெற்கு), எல்.முத்துக்குமார் (வடக்கு), ஈ.பி.ரவி (மாநகர்), முன்னாள் எம்எல்ஏ விடியல் எஸ்.சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.