துறைமுக வளர்ச்சி ஆராய்ச்சியில் உலக அளவில் முதல் பரிசு வென்ற ஆலங்குளம் இளைஞர்
By ராமச்சந்திரன் | Published On : 23rd May 2013 06:53 PM | Last Updated : 23rd May 2013 06:56 PM | அ+அ அ- |

உலக அளவில், இண்டர்நேஷனல் அசோசியேசன் ஆப் போர்ட் & ஆர்பர், ஆண்டுதோறும் துறைமுகங்கள் வளர்ச்சியடையும் நோக்கில், சரக்குகள் கையாள்வதில் புதிய முறைகளை புகுத்துவது தொடர்பாக நடத்தும் ஆராய்ச்சி போட்டியில், உலக அளவில் முதல் பரிசை ஆலங்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் வென்றார்.
இண்டர்நேஷனல் அசோசியேசன் ஆப் போர்ட் & ஆர்பர் ஆண்டுதோறும் நடத்தும் இத்தகைய ஆராய்ச்சி போட்டி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.இதில் குஜராத் அதானி போர்ட் நிறுவனத்தில் சரக்குகள் கையாளும் பிரிவில் மேலாளராக பரிபுரிந்து வரும் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கீழகாட்டூர் என்ற சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பாடலிங்கம் மகன் பா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
இந்தப் போட்டியில் வென்றவர்கள் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியாகி,அதன் பரிசளிப்பு விழா லாஸ்ஏஞ்சல்ஸ்சில் நடைபெற்றது.இதில் உலக அளவில் முதல் இடத்தை வென்று அகியமா அவார்டு க்கு பா.சுப்பிரமணியன் தேர்ந்தெடுக்கப் பட்டதோடு,அண்மையில் லாஸ்ஏஞ்சல்சில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில், அகியமா அவார்டும், லாஸ்ஏஞ்சல்ஸ் போர்ட் அத்தாரிட்டி சார்பில் 1000 டாலர் (இந்திய மதிப்பு 55 ஆயிரம்) வெகுமதியும், போக்குவரத்துச் செலவுக்காக சுமார் 3.5 லட்சமும் பா.சுப்பிரமணியனுக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து பரிசு பெற்ற பா.சுப்பிரமணியன் கூறியது:
நான் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். நான் பொறியியல் ஆராய்ச்சி பட்டதாரி கிடையாது. சாதாரண பட்டப் படிப்பையே படித்துள்ளேன். நான் பணிபுரியும் நிறுவனத்தில், துறைமுகங்களில் கப்பல்களில் சரக்குகள் கையாள்வதில் புதிய யுத்தியை கையாண்டு சரக்குகள் கையாள்வதை எளிதாக்கி, கூடுதல் பயன்தரும் வகையில் ஆராய்ச்சி மேற்கொண்டேன். அதற்குதான் இந்த பரிசு கிடைத்துள்ளது. எனக்கு உலக அளவில் முதலிடம் கிடைத்தது மகழ்ச்சியை தருகிறது. இந்த முறையை வருங்காலங்களில் பயன் படுத்தினால் கப்பல்கள் துறைமுகங்களில் சரக்குகளை விரைவில் இறக்கி விட்டு செல்ல முடியும்.
இந்த ஆராய்ச்சியின் மூலம் துறைமுகங்கள் அதிகளவில் சரக்குகளை கையாள முடியும். தற்போது கிரேன் மூலம் அதிகபட்சமாக கையாளும் எடையை காட்டிலும், அதிக சரக்குகளை கையாள முடியும். 30 முதல் 40 சத அளவிற்கு கையாளும் திறன் அதிகரிக்கும். உலக அளவில் பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். எனது ஆராய்ச்சியை மையமாக கொண்டு உலகின் மிகப்பெரிய கிரேன் தயாரிப்பு நிறுவனமான FIGEE NETHERLAND நிறுவனம்,கிரேன் தயாரிக்க முன் வந்துள்ளது என்றார் அவர்.