விருதுநகர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ரத்னவேல் வேட்பு மனுத்தாக்கல்

விருதுநகர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ரத்னவேல் வேட்பு மனுத்தாக்கல்

விருதுநகர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரத்னவேல், தனது ஆதரவாளர்கள் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு
Published on

விருதுநகர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரத்னவேல், தனது ஆதரவாளர்கள் ஆகியோருடன் வெள்ளிக்கிழமை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

விருதுநகர் மக்களவை தொகுதியின் வேட்பாளராக திமுக சார்பில் எஸ்.ரத்னவேல் போட்டியிடுகிறார். இவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் பகல் 12.25 மணிக்கு வந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் டி.என்.ஹரிஹரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது உடன் அக்கட்சியின் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சேடபட்டி முத்தையா, மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.ஆர்.ராமசந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சொக்கர் மற்றும் விருதுநகர் எண்ணெய் வணிக பிரமுகர் இதயம் முத்து ஆகியோர் இருந்தனர். அதையடுத்து, 15 நிமிடங்கள் வரையில் ஆட்சியர் அலுவலக அறைக்குள் அமர்ந்திருந்தனர். பின்னர், தேர்தல் அலுவலர்களிடம் இருந்து வேட்பு மனுத்தாக்கல் செய்ததற்கான சான்று, செலவின பதிவேடு மற்றும் விதிமுறை குறித்த படிவங்களை கையொழுத்திட்டு பெற்றுக் கொண்டார்.

இது குறித்து விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் ரத்னவேல்  செய்தியாளர்களிடம் கூறிதயதாவது:

மிகவும் பின்தங்கிய தொகுதியாக இருக்கிறது. அதனால் இங்கு மத்திய அரசு அனுமதியுடன் பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வந்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பேன். அதோடு, தொழில் வசதிக்கான கட்டமைப்புகளையும், விவசாயம் செழிப்பாக மேற்கொள்வதற்காகவும் நடவடிக்கை எடுப்பேன். அழகிரியினால் வெற்றி வாய்ப்பு பாதிக்குமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இல்லை உறுதியாக வெற்றி பெறுவேன் என குறிப்பிட்டார்.

மேலும், விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைப்பது முக்கிய பிரச்னையாக இருக்கிறது. இப்பகுதியில் தரைப்பாலமா, மேம்பாலமா என்பதில் சாத்தியம் எது என்பதை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவேன். அதன் மூலம் சுமுகமான முறையில் தீர்த்து குறிப்பிட்ட பகுதியில் 6 மாதத்திற்குள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார் மக்களவை வேட்பாளர் ரத்னவேல்.

குழம்பிய திமுக வேட்பாளர்:

வேட்பு மனுவில் உள்ள குறிப்பிட்ட படிவத்தில் வாக்கு பதிவு இயந்திரத்தில் பெயர் என்னமாதிரி இருக்க வேண்டும் என்கிற விவரம் பதிவு செய்ய வேண்டும். இதில், சரியாக தமிழில் பெயரையும், முகவரியையும் குறிப்பிட வேண்டும். இப்படிவத்தில் முதலில் பெயரை தமிழில் குறிப்பிட்டு, முகவரியை ஆங்கிலத்தில் எழுதினார். அதில் திருப்தியளிக்காத நிலையில் மீண்டும் படிவம் கேட்டு வாங்கி இனிசியலை ஆங்கிலத்தில் குறிப்பிட்டு பெயரை தமிழில் எழுதினார். அதுவும் தவறாக போகவே, மீண்டும் ஒரு படிவத்தை பெற்று குழம்பிய நிலையில் தமிழில் நிரப்பிக் கொடுத்தார். இதற்காகவே அந்த அறையில் 15 நிமிடங்கள் வரையில் அமர்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com