விருதுநகர் மக்களவை தேர்தல் பணிக்கு கேரள ஆயுதப்படை போலீஸார் வருகை
மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியை மேற்கொள்வதற்காக கேரள சிறப்பு ஆயுதப்படை பிரிவின் 3 கம்பெனியினர் விருதுநகருக்கு சனிக்கிழமை இரவு வருகை தந்தனர்.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 24-ம் தேதி நடைபெற இருக்கிறது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவப்படையினரையும் பாதுகாப்பு பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபடுத்துவது வழக்கம். அதேபோல், இந்த மக்களவை தேர்தலிலும் ஈடுபடவுள்ளனர். விருதுநகர் மக்களவை தொகுதியில் 2500 போலீஸாருடன் தேர்தலை எதிர்கொள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவ படையினர் 10 கம்பெனிகள் தேவையென தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் ஏற்கனவே இத்தொகுதிக்கு சென்னை மணலியில் இருந்து தொழில் பாதுகாப்பு படைப்பிரிவின் ஒரு கம்பெனியினர் கமாண்டர் தலைமையில் 92 பேர் வந்துள்ளனர். இவர்களை தனியார் அரங்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து கேரள சிறப்பு ஆயுதப்படை பிரிவைச் சேர்ந்த 3 கம்பெனிகளைச் சேர்ந்த 288 பேர்கள் பெங்களூருவில் தேர்தல் பணிகளை முடித்துக் கொண்டு வந்தனர். இவர்கள் பதற்றமான வாக்குச் சவாடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்வது, வாக்கு பதிவு முடிந்ததும் வாக்கு பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்து வரும் பணியையும், வாக்கு எண்ணிக்கையின் போது பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
