வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடில் துடைப்பத்தால் அடியுங்கள்: ஆம் ஆத்மி வேட்பாளர் ஆவேசம்

நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடில் துடைப்பத்தால் அடியுங்கள் என்று ஈரோடு மக்களவைத் தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கே.கே.குமாரசாமி
Updated on
1 min read

நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடில் துடைப்பத்தால் அடியுங்கள் என்று ஈரோடு மக்களவைத் தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கே.கே.குமாரசாமி ஆவேசமாக பிரசாரம் செய்தார்.

 ஈரோடு மக்களவைத் தொகுயியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.கே.குமாரசாமி, திங்கள்கிழமை முனிசிபல் காலனி, வெட்டுக்காட்டுவலசு, பாப்பாத்திகாடு, வில்லரசம்பட்டி, கங்காபுரம், வாய்க்கால்மேடு, சித்தோடு, கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், சொட்டையம்பாளையம், மாமரத்துபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், சி.எஸ்.நகர், கனிராவுத்தர்குளம், சூளை வழியாக அசோகபுரத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

 அப்போது அவர் பேசியதாவது: இந்திய நதிகளை இணைத்து தமிழக விவசாயிகள் மற்றும் மக்களின் நீர் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகாண ஆம்ஆத்மி கட்சி நடவடிக்கை எடுக்கும். ஈரோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள சாய, தோல் தொழில்சாலை கழிவு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதி கழிவுகளையும் கான்கிரீட் கால்வாய் அமைத்து கடலில் கலக்க ஏற்பாடு செய்வேன்.

 மாவட்டம் முழுவதும் சாலைகளை சீராக்கி பாதுகாப்பான நடைபாதைகளை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகள் நிலவும் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன். மாவட்டத்தில் தேவைப்படும் இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

 அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தி தனியார் மருத்துவமனைக்கு இணையாக கொண்டு வருவேன். அரசு சார்பில் புதியதாக மருத்துவ கல்லூரி, வேளாண் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி அமைக்க பாடுபடுவேன். நிலுவையில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கான ஓய்வூதியம் பெற்று கொடுப்பேன்.

 இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் அமைத்து பராம்பரிய விதைகளை காக்கவும், மரபணு மாற்ற விதைகள் கொண்டு வருவதை தடுப்பேன். வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை தேசிய பறவைகள் சரணாலயமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன்.

 ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் எனக்கு துடைப்பம் சின்னத்தில் வாக்களியுங்கள். நான் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் துடைப்பத்தால் என்னை நீங்கள் அடிக்கலாம். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவும், லஞ்ச, ஊழலை ஒழிக்கவும் ஆம்ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார்.

 இந்த பிரச்சார நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கள்ளிப்பட்டி கார்த்திகேயன், மாவட்ட அமைப்பாளர் செந்தில்வேல், நிர்வாகிகள் பாலு, அன்பு, ஜான்சிங், ஆனந்த், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com