விருதுநகர் மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் 750 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், ஒவ்வொரு சுற்றுக்கும் ஒருமுறை எண்ணிக்கை விவரங்களை ஒலி பெருக்கிகள் மூலம் தெரிவிக்கவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
விருதுநகர் மக்களவை தொகுதியில் கடந்த 24-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற்றது. இதில், 1526 வாக்குச் சாவடி மையங்களில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிற செந்திக்குமார நாடார் கல்லூரி மற்றும் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி வளாக மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதில், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கையும், வெள்ளைச்சாமி நாடார் வாக்கு எண்ணும் மையத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் வருகிற 16-ம் தேதி நடைபெற இருக்கிறது. வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துணை ராணுவப்படை, ஆயுதடை பிரிவு போலீஸார் மற்றும் காவல் துறையினர் ஆகிய மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதோடு, சீல் வைக்கப்பட்ட அறை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டோர்களின் நடவடிக்கை ஆகியவை அனைத்தும் வெப்கேமரா மூலம் கணிப்பொறி உதவியோடு கண்காணிக்கப்பட்டுகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நேரத்தில் தனித்தனி அறைகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 14 மேஜைகளில் எண்ணப்பட்ட வாக்குகளில், ஒவ்வொரு வேட்பாளருக்கு எத்தனை வாக்குகள் என்கிற விவரத்தை பதிவு செய்து தெரிவிக்க வேண்டும். இப்பணியில் மொத்தம் 750 அலுவலர்கள் வரையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.