கருந்திரிகள் தயாரிக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டி, டி.சேடபட்டி மற்றும் குல்லூர்சந்தை ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டு
Updated on
1 min read

பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளில் வெள்ளைத்தாள் ஒட்டும் பணிக்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திங்கள்கிழமை கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

விருதுநகர் அருகே தம்மநாயக்கன்பட்டி, டி.சேடபட்டி மற்றும் குல்லூர்சந்தை ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, போலீஸார் திடீர் சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி குறிப்பிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குறைகளை தெரிவித்த பின் குறிப்பிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 பேரை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பதற்கு அனுப்பி வைத்தனர்.

இதில் தம்மநாயக்கன்பட்டி, சேடபட்டி, குல்லூர்சந்தை ஆகிய கிராம மக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

இப்பகுதியில் 50 ஆண்டுகளாக 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பட்டாசு ஆலைகளில் இருந்து நேரடியாக கொண்டு வந்து கொடுக்கும் கருந்திரிகளுக்கு வெள்ளைத்தாள் சுற்றிக்கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அதோடு, வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதால் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவு வருவாய் கிடைக்கிறது.

இதிலிருந்து கிடைக்கும் கூலிதான் எங்களின் வாழ்வாதாரம் ஆகும். மேலும், இந்த வேலையைத் தவிர மாற்றுத் தொழில் எதுவும் தெரியாது. இக்கிராமங்களை பொறுத்தவரையில் சட்டவிரோதமாக வெடி தயாரித்தல், மூலப்பொருள்கள் கொண்டு கருந்திரி தயாரிப்புக் கூடமோ இல்லை. இதுவரையில் எந்த விபத்துக்களும் நடந்தது இல்லை. எனவே கருந்திரிகளில் வெள்ளைத்தாள் ஒட்டும் பணிக்கு அரசு அனுமதிக்க வேண்டும் என கிராம மக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்த தெரிவித்துள்ளனர்.

அந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதியளித்தார். அதையடுத்து, குறிப்பிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com