விருதுநக மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிலைகளை இந்து முன்னணி மற்றும் பா.ஜ.கவினரால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலையில் நீர் நிலைகளில் கரைத்தனர்.
விருதுநகரில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க சார்பில் வெயிலுகந்தம்மன் திருக்கோயில் முன்புறம், தேசபந்து மைதானம், மேற்குத் தெரு, டி.டி.கே சாலை, மேற்குத் தெரு, அல்லம்பட்டி, பாண்டியன் நகர், முத்துராமன்பட்டி உள்ளிட்ட 53 இடங்களில் 2 அடி முதல் 12 அடி வரையில் பல்வேறு ரகங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. அதேபோல், சிவகாசி நகரம் மற்றும் ஒன்றிய பகுதியில் 59 சிலைகளும், அருப்புக்கோட்டையில் 35 சிலைகளும், ராஜபாளையத்தில் 42 சிலைகளும், சாத்தூரில் 44 சிலைகளும், திருச்சுழியில் 3 என மொத்தம் 277 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து வந்தனர். இதற்கு நாள்தோறும் குத்துவிளக்கு பூஜை மற்றும் மூன்று கால சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.
இதேபோல், விருதுநகரில் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கு கடந்த மூன்று நாள்களாக சிறப்பு பூஜை செய்தனர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாலையில் இந்து முன்னணி, பா.ஜ.க நிர்வாகிகள் முன்னிலையில் விநாயகர் சிலைகள் மேலதாளம் முழங்க டிராக்டர்களில் வைத்து ஊர்வலமாக தேசபந்து மைதானத்திற்கு கொண்டு வந்தனர். இங்கிருந்து, பாவாலி சாலை, பழைய பேருந்து நிலையம், மதுரை சாலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் வழியாக சிலைகளை கொண்டு சென்றனர். பின்னர் அப்பகுதியி்ல் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட நீர் ஆதாரப் பகுதியான கல்கிடங்கில் ஒவ்வொரு விநாயகர் சிலைகளையும் கரைத்தனர்.
இந்த ஊர்வலத்தை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் விருதுநகர் துணைக்காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.