விருதுநகர் பகுதியில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த திருடர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடம் இருந்து 45 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர், ஆமத்தூர் பகுதிகளில் ஆள்கள் இல்லாத வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் போன்றவைகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் அன்னராஜ், சார்பு ஆய்வாளர் அருண்ராஜ் ஆகியோர் தலைமையில் போலீஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது, வடமலைக்குறிச்சி சாலையில் சந்தேகத்திற்குமான நபர்கள் சுற்றித் திரிவதாக திங்கள்கிழமை அதிகாலை போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக நடந்து வந்தவர்கள் போலீஸாரை பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர்.
உடனே சுற்றிவளைத்து பிடித்து விசாரித்ததில் பரமக்குடியைச் சேர்ந்த ரெங்கன் மகன் ராமகிருஷ்ணன்(30), மாடசாமி மகன் செந்தில்(27), பாண்டி மகன் சங்கர்(28), செட்டியப்பன் மகன் ரமேஷ்(38), ரெங்கசாமி மகன் ரவிச்சந்திரன்(43) என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் ஆமத்தூர் அருகே கோழிப்பண்ணை வீட்டில் இரவில் புகுந்து கத்தியை காட்டி கொள்ளையடித்தது, வீரச்செல்லையாபுரம், பெரியவள்ளிக்குளம், விருதுநகர் என்.ஜி.ஓ.காலனி உள்ளிட்ட பகுதிகளில் பூட்டியிருந்து வீட்டிற்குள் நகை திருடியதில் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 45 சவரன் நகையையும் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.