மதுரை அருகே ஆதரவற்ற விதவைகள் மகள் திருமண திட்டத்தில் பணம், தங்கம் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய ஊர்நலப் பெண் அலுவலர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி வட்டம் காம்பூரைச் சேர்ந்தவர் சின்னான். இவரது மனைவி காத்தம்மாள் (45). விதவையான இவரது மகள் சித்ராவின் திருமணம் 2013-ல் நடந்துள்ளது. தமிழக அரசின் விதவைகள் மகள் திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் பெறுவதற்காக காத்தம்மாள் விண்ணப்பித்துள்ளார்.
திட்டத்தின் கீழ் பணம், தங்கம் வழங்கும் சமூகநலத்துறையில் ஊர்நல அலுவலராக நத்தம்பட்டியைச் சேர்ந்த செல்லம் மனைவி பூங்கோதை (55) உள்ளார். திட்டத்தில் ரூபாய் மற்றும் தங்கம் தருவதற்கு காத்தம்மாளிடம் பூங்கோதை லஞ்சம் கேட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து காத்தம்மாள் மதுரை மண்டல லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன்படி காத்தம்மாளிடம் வேதிப்பவுடர் தடவிய ரூபாய்த் தாள்களை லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் அளித்துள்ளனர். அந்த ரூபாய்த் தாள்களை காத்தம்மாள் கொண்டு சென்று, கொட்டாம்பட்டியில் உள்ள அரசு உதவித் தொடக்கப் பள்ளி வளாகத்தில் வைத்து ஊர்நல அலுவலர் பூங்கோதையிடம் கொடுத்தார். பணத்தை பூங்கோதை பெற்ற நிலையில், அங்கு மறைந்திருந்த லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் இசக்கிஆனந்தன் மற்றும் இன்ஸ்பெக்டர் அம்புரோஸ் ஆகியோர் பூங்கோதையைக் கைது செய்தனர்.
பூங்கோதை பயன்படுத்திய அறையைச் சோதனையிட்டு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியதாக கூறிய லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள், கைதான பூங்கோதை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்காவலுக்கு அனுப்பிவைக்கப்படுவார் எனக்கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.