கர்நாடகத்தை தலைமையிடமாகக் கொண்ட வங்கியில் வேலைக்கு போலி உத்தரவு வழங்கி மதுரை, சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் 27 பேரிடம் பல லட்சம் ரூபாய் வசூலித்தவர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.
மதுரை எல்லீஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (32). இவரிடம் ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (26) என்பவர் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமாகி மதுரை கோச்சடையில் உள்ள ஒரு வங்கியில் உயரதிகாரிகளிடம் தனக்கு செல்வாக்கு இருப்பதால் வேலை வாங்கித்தரமுடியும் எனக்கூறியுள்ளார். இதற்காக ரூ.1 லட்சத்தை அசோக்கிடமிருந்து சூரியபிரகாஷ் பெற்றுள்ளார்.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு அசோக்கிடம் வங்கியில் பணிபுரிவதற்கான உத்தரவையும் சூரியபிரகாஷ் அளித்துள்ளார். அதை எடுத்துக்கொண்டு வங்கிக்கு அசோக் சென்றுள்ளார். உத்தரவுடன் வங்கிக்கு சென்ற அசோக், அதை வங்கி முதன்மை மேலாளர் ஆர்.எம்.வ வெங்கடாச்சலத்திடம் காட்டியுள்ளார். ஆனால், உத்தரவு போலியானது என தெரியவந்துள்ளது. இதையடுத்து வங்கி சார்பில் முதன்மை மேளாளர் வெஹ்கடாசலம் மதுரை மாநகர் துணை ஆணையர் சமந்த்ரோஹன் ராஜேந்திராவிடம் புகார் அளித்தார். அதன்படி மாநகர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மோகன் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சூரியபிரகாஷ் மதுரை அசோக்கிடம் மட்டுமின்றி சென்னை, கோவை என மொத்தம் 27 பேரிடம் வங்கியில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் வசூலித்திருப்பதும், இதில் சிலருக்கு வங்கி பணிக்கு என போலி உத்தரவு வழங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட வங்கியின் வேலைகளுக்கு கர்நாடக மாநிலம் மணிப்பாலில் இருந்தே உத்தரவு வழங்கப்படும் எனவும்,ஆனால், சூரியபிரகாஷ் கணினி மூலம் வங்கியின் சின்னத்தை பயன்படுத்தி வேலைக்கான உத்தரவை தாமே தயாரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. தலைமறைவான சூரியபிரகாஷைப் போலீஸார் தேடிவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.