விருதுநகர் மாவட்டத்தி்ல் பிளஸ்2 மாணவ, மாணவிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் மேலும் கூடுதலாக 8 தேர்வு மையங்களுக்கு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வு அடுத்தாண்டு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 31-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளான மாணவ, மாணவிகளின் பெயர் சரிபார்ப்பு, பிறந்த தேதி மற்றும் முகவரிகளை சரிபாக்கும் பணிகள் மேற்கொண்டு, சரியான தகவல்களை கணிப்பொறியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, இம்மாவட்டத்தில் 192 மேல்நிலைப்பள்ளிகளில், 67 பள்ளிகள் தேர்வு மையங்களாக இருந்து வருகிறது. அதனால் கூடுதலாக மையங்கள் அமைப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதை ஆய்வு செய்து நிகழாண்டு முதல் கூடுதலாக 8 தேர்வு மையங்கள் அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பி.ராமச்சந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, தைலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சத்திரப்பட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் பிளஸ்2 தேர்வு மையங்களாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே 67 மையங்களாக இருந்த நிலையில், கூடுதலாக 8 மையங்களைச் சேர்த்து மொத்தம் 75 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.