அரசு வேலைவாய்ப்பில் சமஉரிமை வழங்கிடக் கோரி தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் நாமக்கல்லில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையத்தில் தனியார் செலிவியர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் மூன்றாம் நாளாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாமக்கல் பிஜிபி, விவேகானந்தா, அரவிந்த் ஆகிய தனியார் செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகம் முன் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எவ்வித பாரபட்சமின்றி பொதுத் தேர்வின் மூலம் செவிலியர்களை அரசுப் பணியில் அமர்த்த வேண்டும். செவிலியர் பணியமர்த்துவது தொடர்பான அரசாணையை எவ்வித திருத்தமும் செய்யாமல் நிறைவேற்ற வேண்டும். கலந்தாய்வு மூலம் தனியார் கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவ, மாணவியருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். தனியார் கல்லூரியில் பயிலும் பிறதுறை மாணவர்களுக்கு உள்ளது போன்று செவிலியர் மாணவர்களுக்கும் உரிமை வழங்க வேண்டும். முதுகலை பட்டப்படிப்பு படித்த செவிலியர்களை பொதுத் தேர்வின் மூலம் அரசு செவிலியர் கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணியமர்த்த வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.