மதுரையில் ஊரக காவல் கண்காணிப்பாளராக இருந்த பாலகிருஷ்ணன் சென்னை மயிலாப்பூர் துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதை அடுத்து நெல்லை காவல் ஆணையராக இருந்த விஜேந்திர பிதரி மதுரை ஊரக காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இன்று பொறுப்பேற்றுக் கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
மதுரை மாவட்டத்தில் ஏற்கெனவே கண்காணிப்பாளராக இருந்த பாலகிருஷ்ணன் சிறப்பாகவே பணியாற்றியுள்ளார். அவர் செயல்படுத்திய திட்டங்களை தொடர்ந்து கடைப்பிடிப்பேன். காவல் நிலையங்களில் பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்படி எடுக்கபடாவிட்டால் உண்மை நிலையை அறிந்து அதற்கேற்ற மாற்றம் செய்யப்படும். அதிகாரிகள் பணியில் நேர்மையாகவும் மக்களுக்கு ஒத்துழைப்புடனும் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் வகையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விபத்துகளைக் குறைக்க நெடுஞ்சாலைத்துறை ரோந்து வாகனம் மற்றும் சாலைப்பொறியாளர்கள் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
திருட்டு வழிப்பறியைக் குறைக்கும் வகையில் ரோந்து சீர்படுத்தப்பட்டு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். பழைய வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டறிய முன்னுரிமை அளிக்கப்படும்.
அனைத்து போலீஸ் நிலையங்களிலும் முதியோருக்கு தனிப்பிரிவு செயல்படுத்த நீதிமன்ற உத்தரவுப் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமும் பகல் 12 - 1 மணி வரை பொதுமக்களைச் சந்தித்து குறை தீர்க்கும் கூட்டம் நடத்த எண்ணியுள்ளேன். போலீஸ் நிலையங்களில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பொதுமக்கள் என்னிடம் குறைகளைத் தெரிவிக்கலாம் என்றார் விஜேந்திர பிதரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.