இலங்கை மீனவர்களை நீதிமன்றக்காவலில் அடைக்க நாகை நீதிமன்றம் உத்தரவு

எல்லைத் தாண்டி இந்தியக் கடல் பரப்பில் மீன்பிடித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 25 பேரையும் நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க நாகை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை
Updated on
1 min read

எல்லைத் தாண்டி இந்தியக் கடல் பரப்பில் மீன்பிடித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 25 பேரையும் நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க நாகை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே இந்தியக் கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 25 இலங்கை மீனவர்களையும், அவர்களின் 5 விசைப் படகுகளையும் கடலோரக் காவல் படை போலீஸார் திங்கள்கிழமை காலை சிறைப்பிடித்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் காரைக்கால் தனியார் துறைமுகத்துக்குக்  கொண்டுச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம், கடலோரக் காவல் படை, கடலோரப் பாதுகாப்புக் குழுமம் மற்றும் கியு பிரிவு போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களில் 10 பேர் இலங்கைத் தமிழர்கள். என்பதும், 15 பேர் சிங்கள மீனவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.விசாரணைகளுக்குப் பின்னர், இலங்கை மீனவர்கள் நாகை மாவட்ட ஆட்சியரகத்துக்குக் கொண்டு வரப்பட்டனர். 

அயல்நாட்டவரை சிறையிலடைக்கும் முன்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் கூட்டு விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், இலங்கை மீனவர்களிடம் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபிசக்ரவர்த்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, எல்லைத் தாண்டி இந்தியக் கடல் பரப்பில் மீன்பிடிப்பு மேற்கொண்டது தொடர்பாக, இந்திய கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் இலங்கை மீனவர்கள் 25 பேர் மீதும் கீழையூர் கடலோரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை நாகை குற்றவியல் நடுவர் மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அப்போது, இலங்கை மீனவர்கள் 25 பேரையும் வரும் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி சரஸ்வதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, இலங்கை மீனவர்கள் 25 பேரையும் புழல் சிறைக்குக் கொண்டுச் செல்லும் நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com