ஸ்ரீவில்லிபுத்தூரில் பூட்டிய வீட்டிற்குள் அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மனைவி ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதமா அல்லது பணம், நகைக்காக கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து வெவ்வேறு கோணங்களில் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சவரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சோலைமலை(56). இவர் கிருஷ்ணப்பேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை கணக்கு பாட ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரோஜா(58) ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றராவார். இந்நிலையில் பூட்டிய இவர்கள் வீட்டில் இருந்து திங்கள்கிழமை மாலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே அப்பகுதி மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெளியே பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு கணவனும், மனைவியும் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிந்து கிடந்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரையில் இருவரும் வெளியில் நடமாடியதாக அப்பகுதி மக்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமா அல்லது பணம், நகைக்காக ஆசைப்பட்டு கணவன், மனைவியும் கொலை செய்யப்பட்டார்களா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். பூட்டிய வீட்டிற்குள் நடந்த இக்கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.