விருதுநகர் மாவட்ட திட்ட அலுவலரின் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் திட்ட அலுவலராக பணியாற்றி வரும் பிரபாகரின் மனைவி முத்துலட்சுமி(38). இவர் திருப்பரங்குன்றத்தில் உணவு விடுதி நடத்தி வந்துள்ளார். அதில் இப்பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி செல்வி(30)மேலாளராக பணியாற்றினாராம். இதில் வசூலாகும் பணம் குறித்து கணக்கு எதுவும் குறிப்பிடாமல் இருந்துள்ளார். அதோடு, வேலைக்குச் சேர்ந்த போது முன்பணமாக ரூ.70 ஆயிரம் முத்துலட்சுமி கொடுத்துள்ளார். அதையும் திருப்பிக் கேட்டுள்ளார். இந்நிலையில் கணக்கு கூறவும், பணத்தை திருப்பித்தாரவும் காலதாமதம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள திட்ட அலுவலர் குடியிருப்பிற்கு செல்வி,அவரது கணவர் விஜயகுமார், உறவினர் லட்சுமி உள்ளிட்ட 5 பேர் வந்து முத்துலட்சுமியை கல்லால் தாக்கி தகராறு செய்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். உடனே இது தொடர்பாக காயத்துடன் முத்துலட்சுமி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் குறிப்பிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு: விருதுநகர் 4வழிச்சாலையிலிருந்து வடமலைக்குறிச்ச பிரிவு சாலையில் பாலம் உள்ளது. இப்பாலம் வழியாக இந்திரா நகர், அய்யனார் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வாகனங்களிலும், நடைபாதையாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்துள்ளனர். அப்போது பாலத்தின் அடியில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது.
இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸார் விரைந்து வந்து பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். எனவே இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.