நாமக்கல் லாரி ஓட்டுநரை மகாராஷ்டிர கொள்ளையர்கள் கடத்தல்: குடும்பத்தினர் ஆட்சியரிடம் முறையீடு

நாமக்கல் லாரி ஓட்டுநரை மகாராஷ்டிர மாநில கொள்ளையர்கள் கடத்திச் சென்று 16 நாட்களுக்கு மேலாகியுள்ளது. எனினும், இதுவரை எந்த தகவலும் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநரின்
Updated on
1 min read

நாமக்கல் லாரி ஓட்டுநரை மகாராஷ்டிர மாநில கொள்ளையர்கள் கடத்திச் சென்று 16 நாட்களுக்கு மேலாகியுள்ளது. எனினும், இதுவரை எந்த தகவலும் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட லாரி ஓட்டுநரின் மனைவி, தாய் உள்பட உறவினர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை முறையிட்டனர்.

நாமக்கல் போதுபட்டி அருகே லக்காபாளையத்தைச் சேர்ந்த ராமசாமியின் மகன் ரமேஷ்(29). இவர் வள்ளிபாளையத்தைச் சேர்ந்த பழனியாண்டி என்பவருக்கு சொந்தமான புதுவெங்கரையம்மன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றுகிறார். தூத்துக்குடியிலிருந்து ஆந்திர மாநிலம் அனந்தபூருக்கு லாரியில் உப்பு பாரம் கொண்டு செல்ல டிசம்பர் 17-ம் தேதி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

19-ம் தேதி அனந்தபூரிலிருந்து மகாராஷ்டிர மாநிலம் பீடு பகுதிக்கு லாரியில் பருத்திக் கொட்டை பாரம் ஏற்றிச் சென்றுள்ளார். 20-ம் தேதி அங்கிருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்துக்கு பருத்தி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரியை ஓட்டி வந்துள்ளார். லாரியில் மற்றொரு ஓட்டுநரான நாமக்கல் நல்லிபாளையத்தைச் சேர்ந்த செல்வம்(35) இருந்துள்ளார்.

20-ம் தேதி இரவு மகாராஷ்டிர மாநில எல்லைக்குள் வந்து கொண்டிருந்தபோது வழிமறித்த கொள்ளையர்கள், லாரியில் இருந்த ரூ.60 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்ததுடன் செல்வத்தின் கை, கால்களை கட்டி சோளக்காட்டில் போட்டுவிட்டு லாரியுடன் ரமேஷை கடத்திச் சென்றனராம். தொடர்ந்து லாரியை அங்கிருந்த 50 கிமீ தொலைவில் நிறுத்திச் சென்றது பின்னர் போலீஸôரின் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் கடத்திச் செல்லப்பட்ட லாரி ஓட்டுநர் ரமேஷ் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

இதனால் அச்சமடைந்துள்ள ரமேஷின் மனைவி சந்திரா(24), குடும்பத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியிடம் திங்கள்கிழமை மனு அளித்தார். அப்போது சந்திரா கூறுகையில், ஏற்கனவே எனக்ரு 1.5 வயதில் பெண் குழந்தை இருப்பதுடன், தற்போது 8 மாத கர்ப்பிணியாகவும் உள்ளேன். மகாராஷ்டிர மாநிலத்துக்கு சரக்கு கொண்டு சென்று கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எனது கணவர் ரமேஷ் குறித்து 20-ம் தேதிக்கு பிறகு எந்த தகவலும் இல்லை. லாரி உரிமையாளரிடம் இருந்தும் எவ்வித ஒத்துழைப்பும் இல்லை. எனவே, வழிப்பறிக் கொள்ளையர்களால் கடத்தப் பட்ட எனது கணவர் ரமேஷை கண்டுபிடித்து மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com