விருதுநகர் மாவட்டத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாமை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசுகையில், இன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய் பாதிப்பு இல்லாத நிலை உருவாக வேண்டும்.
இதற்காக கடந்த 1995-வது ஆண்டு முதல் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் குறிப்பிட்ட நாள்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக பிப்.3-ம் தேதியும் நடைபெற இருக்கிறது. இம்மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாராத நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளிலும் வழங்கப்படுகிறது. அதோடு, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் மொத்தம் 1098 மையங்களில் 1,64,686 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், இப்பணியில் சுகாதார நிலைய செவிலியர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் என 4452 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமில் பங்கேற்று போலியோ இல்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் பாண்டியராஜன், நகராட்சி தலைவர் மா.சாந்தி, துணைத் தலைவர் மாரியப்பன், சுகாதார துறை துணை இயக்குநர் டாக்டர் சண்முகசுந்தரம், நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) மணி, நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துராஜ், நகராட்சி உறுப்பினர் பொன்னுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.