விருதுநகர் அருகே நிலம் வாங்கி வீடு கட்டித் தருவதாகக் கூறி 3 பேரிடம் ரூ.33.40 லட்சத்தை மோசடி செய்த வங்கி மேலாளர் உள்பட 5 பேர் மீதுபோலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை அருகே சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்தவர் ராகினிமேரி(58). இவரது கிறிஸ்துவ சபையில் உறுப்பினராக இருப்பவர் விருதுநகர் அருகே பாவாலியைச் சேர்ந்த பாபுநாயுடு(60). இவருடன் இதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி, சங்கரப்பன்,பாண்டியராஜன், முத்துக்குமார் ஆகியோர் சேர்ந்து பாவாலி-சந்திரிகிரிபுரம் சாலையில் குறைந்த விலையில் நிலம் உள்ளதாகவும், அதில் கடன் பெற்று வீடு அமைத்து தருவதாகவும் கூறி அணுகியுள்ளனர். இதை உண்மையென நம்பிய ராகினிமேரி நேரில் கிராமத்திற்குச் சென்று இடத்தை பார்வையிடாமல், விருதுநகர் பேங்க் ஆர் பரோடாவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மேலாளர் ராதாகிருஷ்ணன் உதவியுடன் கடன் ஆவண பத்திரங்களில் கையொப்பம் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் கடந்த மாதம் புதிய வீடு அமைக்கும் பணியை பார்வையி்டுவதற்காக வந்துள்ளார். அப்போது, அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் நிலமும் இல்லை, வீடு அமைக்கவும் இல்லையெனவும், தான் மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டதற்கு வங்கிக் கடன் வரவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து வங்கியில் சென்று பார்க்கும் போது ரூ.10 லட்சம் பெற்றிருந்தது தெரியவந்தது.
இதேபோல், அருப்புக்கோட்டை சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவரின் பேரில் ரூ.11.40 லட்சமும் மற்றும் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த கொப்பையன் மகன் ஜெயச்சந்திரனிடம் போலியான ஆவணங்களை காட்டி ரூ.12 லட்சமும் கடன் பெற்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
இது குறித்து ஆமத்தூர் காவல் நிலையத்தில் ஒவ்வொருவரும் தனித்தனியாக புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பாவாலியைச் சேர்ந்த பாபுநாயுடு, மீனாட்சி, பாண்டியராஜன். முத்துக்குமார் மற்றும் பாங்க் ஆப் பரோடவின் மேலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.