விருதுநகர் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான வசதிகள் உள்ளனவா என்பது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்களுடன் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால், அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் உள்ள விருதுநகர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் செந்திக்குமார நாடார் கல்லூரி மற்றும் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்படும். இந்த மையங்களில் போதுமான வசதிகள் உள்ளனவா என்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மக்களவை தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இந்த மையங்களுக்கு கொண்டு வரப்படும். இதில், விருதுநகர், சிவகாசி, சாத்தூர் தொகுதிகளில் பதிவான வாக்குகள் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை செந்திக்குமார நாடார் கல்லூரியிலும் வைக்கப்படும். இம்மையங்களில் சுற்றுச்சுவர் உள்ளதா எனவும், வாக்குப்பெட்டி வைக்கும் அறை பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அப்போது உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நடராஜன், துணை வட்டாட்சியர் கண்ணன், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.