விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் பயிற்சி மாணவிகள் உதவித் தொகை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மருத்துவமனை முன்பு நடந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆதவன் தலைமை வகித்தார். இச்சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்தார்.அரசு செவிலியர் மற்றும் தனியார் செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி நியமனம் செய்யும் அரசு ஆணை-29ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசு பயிற்சி நிலையங்களில் மூன்றரை ஆண்டுகள் படித்து பட்டயம் பெற்றவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் செய்ய வேண்டும். தனியார் கல்லூரிகளில் ஓராண்டு மற்றும் தொலை தூரக் கல்வி இயக்கங்களில் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு பட்டயம் வழங்கக் கூடாது.
தமிழகத்தில் உள்ள 24 செவிலியர் பயிற்சி நிறுவனங்களில், விருதுநகர் உள்ளிட்ட மூன்று பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மட்டும் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கவில்லை. இனிமேல், அதை ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பை புறக்கணித்து விட்டு காலையில் இருந்தே செவிலியர் பயிற்சி மாணவிகள் கோஷமிட்டுக் கொண்டே மருத்துவமனை முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.