குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்: அதிகாரிகள் சமரசம்

களக்காடு அருகே நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, கிராம மக்கள் இருவேறு இடங்களில் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

களக்காடு அருகே நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, கிராம மக்கள் இருவேறு இடங்களில் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமரசத்தால் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

களக்காடு ஊராட்சி ஒன்றியம், கள்ளிகுளம் ஊராட்சி மன்றத்துக்கு உள்பட்டது கள்ளிகுளம், தெற்கு மீனவன்குளம் ஆகிய கிராமங்கள். இந்த இரு கிராமங்களிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குடிநீர்ப் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கள்ளிகுளம், தெற்கு மீனவன்குளம் கிராம மக்கள் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க வலியுறுததி, கள்ளிகுளம் ஊராட்சி மன்றத்திலும், களக்காடு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. குடிநீர் பிரச்னையைக் கண்டித்து கடந்த சில மாதங்களில் மட்டும் இந்த கிராம மக்கள் ஓரிரு முறை சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போதெல்லாம் காவல்துறையினரும், ஊராட்சி ஒன்றியக்குழு அதிகாரிகளும்  கிராம மக்களை சமாதானப்படுத்தி, உடனடியாக குடிநீர்ப் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துச் சென்றனர். ஆனால் குடிநீர்ப் பிரச்னை இதுவரை தீர்க்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இதனால் திங்கள்கிழமை காலை கள்ளிகுளம், தெற்கு மீனவன்குளத்தைச் சேர்ந்த பெண்கள் திரளானோர் காலிக்குடங்களுடன் கள்ளிகுளத்தில் ஒரு குழுவினரும், மீனவன்குளத்தில் ஒரு குழுவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் நான்குனேரி காவல் துணைக்கண்காணிப்பாளர் சண்முகம், களக்காடு காவல் ஆய்வாளர் லெட்சுமணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரான்சிஸ் மகராஜன். கள்ளிகுளம் ஊராட்சித் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கிராம மக்களிடம் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கும் பொருட்டு கள்ளிகுளத்தில் செயல்படாமல் உள்ள 2 ஆழ்துளைக்கிணறுகளையும் சீரமைக்கும் பணிகள் விரைந்து தொடங்கப்பட்டு குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் எனறு உறுதியளித்தார். இதையடுத்து, 3 மணி நேரத்திற்கும் மேலாக காலிக்குடங்களுடன் சாலையில் திரண்டிருந்த பெண்கள் கலைந்து சென்றனர்.

மறியல் காரணமாக அந்த வழியாக இயக்கப்படும் தனியார் பஸ்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் திரளான பெண்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com