விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர்களிடமிருந்து தேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

இது தொடர்பாக மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அளவில் நடைபெறும்
Updated on
1 min read

சிறப்பாக சமூக சேவை பணியாற்றி வரும் இளைஞர்களிடம் இருந்து தேசிய விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்பட இருப்பதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் ராமசுப்பிரமணியராஜா தெரிவித்தார். 

இது தொடர்பாக மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அளவில் நடைபெறும் விழாவில் சிறந்த சமூக சேவை பணியாற்றி வரும் இளைஞர்களை தேர்வு செய்து தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் 2013-14 ஆண்டிற்கான இளைஞர் நலப்பணிகளுக்கான விருது இந்நிதியாண்டில் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதை பெற இளைஞர்களாக இருந்தால் குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இதில், இளைஞர்கள்  எவ்வித சுயநலமின்றி சமூக நலன் கருதி சேவைப்பணியாற்றி வருகிறவர்களாக இருக்க வேண்டும். இவர்களுக்கான வயது வரம்பு 13-லிருந்து 35 வயதிற்குள் இருப்பது அவசியம் ஆகும். இதற்கு முன்பு இந்த விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை. மத்திய, மாநில, பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர அரசு நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்களாக இருக்கக் கூடாது. இதில், சிறந்த இளைஞராக தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.40 ஆயிரம் மற்றும் பதக்கம் ஆகியவை 25 பேருக்கு வழங்கப்பட இருக்கிறது.

இதேபோல், தன்னார்வ தொண்டு நிறுவனங்களாக இருந்தால் சட்ட விதிமுறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும். நிர்வாக குழுவின் அதிகாரங்கள் விதிமுறைப்படி குறிப்பிட்டிருக்க வேண்டும். எவ்வித ஆதாயமும் இல்லாமல் சமூக பணியாற்றியிருக்க வேண்டும். குறிப்பிட்ட சாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய நிறுவனங்கள் இந்த விருது பெற தகுதியில்லை. அதேபோல், இதற்கு முன்பு விருது பெற்ற தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டாம். சமுதாய பணியாற்றியது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திக் குறிப்பு உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம் இணைக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு மேம்பாட்டு ஆணைய இணைய தளமான www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல், கடந்த 1.4.2013 முதல் 31-3.2014 வரையிலான காலத்திற்குள் ஆற்றிய சமூகத் தொண்டுகள் பற்றிய விவரங்கள் அடங்கிய 3 நகல்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் 31.7.2014-க்குள் நேரில் கொடுக்க வேண்டும். எனவே இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த விவரங்களின் அடிப்படையில் ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு செய்து சிறந்த சமூக பணியாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் இளைஞர்களை தேர்வு செய்து தேசிய விருது பெற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வார்கள். அதன் அடிப்படையிலேயே ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் ஆகியவை வழங்கப்பட இருப்பதாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராமசுப்பிரமணியராஜா தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com