விருதுநகரில் சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டி வருகிற 25-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 30-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
இது குறித்து விருதுநகர் சதுரங்க கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், சர்வதேச சதுரங்க நடுவருமான ஆனந்தராம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் சதுரங்க கழகம் மற்றும் ஹட்சன், இதயம் ஆகிய தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ராமமூர்த்தி சாலையில் உள்ள சரஸ்வதி அரங்கத்தில் சர்வதேச அளவிலான தர மதிப்பீடு ரேட்டிங் முறையில் சதுரங்க போட்டி நடத்தப்பட இருக்கிறது. இப்போட்டியில் 1 கிராண்ட் மாஸ்டர், 13 சர்வதேச மாஸ்டர்கள், 1 பிடே மாஸ்டர், 1 கேண்டிடேட் மாஸ்டர், தேசிய, மாநில அளவில் சாதனை செய்தவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.இப்போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் பரிசு கோப்பையும், 2-வது பரிசாக ரூ.65 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும், 4-வது பரிசு முதல் 35-வது பரிசு வரையில் ரொக்க பணமாகவும் அளிக்கப்படுகிறது.
இதில், பொதுப்பிரிவில் 8,10,12,15 வயது பிரிவில் முதன் மூன்று இடங்களை பெறுகிறவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் வழங்கப்படும். இதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இதே வயது பிரிவில் கலந்து கொள்கிறவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட இருக்கிறது. இப்போட்டியை சதுரங்க கழகம் சார்பில் இணைய தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச சதுரங்க நடுவர் அனந்தராம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.