விருதுநகர் அருகே பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகாறில் கணவன்-மனைவியை தாக்கியதாக பெண் காவலர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு சூலக்கரை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் அருகே சூலக்கரையைச் சேர்ந்தவர் லட்சுமணன்(42). இவர் மதிமுக மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி ஞானமணி(40). இவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் மாரியம்மாள் என்பவருக்கும் ஏற்கனவே பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் தண்ணீர் பிடிக்கும் போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மாரியம்மாளும், அவரது மகள் தீபாமணியும்(சிவகாசி ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றுகிறார்) சேர்ந்து கம்பாலும், கையாலும் ஞானமணியையும், அதை தடுக்க வந்த அவரது கணவரான லட்சுமணனையும் தாக்கினார்களாம். இதில், ஞானமணி படுகாயம் அடைந்தாராம். இது தொடர்பாக லட்சுமணன் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சூலக்கரை போலீஸார் பெண் காவலர் தீபாமணி, அவரது தாயார் மாரியம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.