விருதுநகர் அருகே குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் நகராட்சிப் பகுதியை அடுத்துள்ள இந்த ஊராட்சியில் பாண்டியன் நகர், முத்தால்நகர், ஓடைப்பட்டி, ரோசல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் துவரம் பருப்பு உடைக்கும் ஆலைகளுக்கும், பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளுக்கும் கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து ஒரு மாதமாகவே குடிநீர் விநியோகம் செய்வதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகையிட்டனர். அங்கு தலைவர் யாரும் இல்லாத நிலையில் விருதுநகர்-காரியாபட்டி சாலையி்ல மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, பாண்டியன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் அருண் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இதற்கு முன்பு வரையில் 10 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகித்து வந்தனர்.
இந்த நீரும் குடிக்க முடியாத அளவிற்கு உப்பு நீராகவே இருக்கும். இந்த நீரையும் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை வழங்கப்படாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இந்நிலையில் குடிப்பதற்காக ஒரு குடம் நீர் ரூ.10-க்கு விலை கொடுத்து வாங்கி வருகிறோம். இதுபோன்ற காரணங்களால் ஒவ்வொரு நாளும் அருகில் உள்ள நகராட்சி மற்றும் ரோசல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 3 கீ.மீ தூரம் நடந்து சென்று உப்பு நீரை எடுத்து வரவேண்டியுள்ளது. இதனால் நாள்தோறும் தண்ணீர் எடுப்பதிலேயே நேரம் ஆகி விடுவதால் கூலிவேலைக்குச் செல்ல முடியாத நிலையேற்படுகிறது. இப்பகுதியில் மேல்நிலைத் தொட்டியிலிருக்கும் நீரை தனியார் வர்த்தக வளாகத்திற்கும், நிறுவனங்களுக்கும் அளித்து வருவதாகவும், அதை உடனே தடுத்து நிறுத்தும் படியும் பொதுமக்கள் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
அதையடுத்து, இனிமேல் மேல்நிலைத் தொட்டிகளில் நீர் நிரப்பி நாள்தோறும் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி பணியாளர்கள் தெரிவித்த பின்னரே பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் விருதுநகர்-காரியாபட்டி சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.