விருதுநகர் மாவட்ட பகுதியில் விதிமுறை மீறல்களுடன் செயல்படும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை

விருதுநகர் மாவட்ட பகுதியில் விதிமுறை மீறல்களுடன் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள் மீது மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால்
Updated on
2 min read

விருதுநகர் மாவட்ட பகுதியில் விதிமுறை மீறல்களுடன் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள் மீது மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் ஆலைகளில்  பட்டாசு உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலையேற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி, சாத்தூர், விருதுநகர் ஆகிய வட்டார பகுதிகளில் பட்டாசு ஆலைத் தொழிலே முதன்மையான தொழிலாக நடந்து வருகிறது.இம்மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற 167 ஆலைகளும், சென்னை மற்றும் நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை உரிமம் பெற்ற 698 ஆலைகள் என மொத்தம் 865 ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிலில் மறைமுகமாகவும், நேரடியாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் வரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சீன வகை பட்டாசு வெடிகளை கட்டுப்படுத்தக் கோரி பெரிய பட்டாசு ஆலை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். அதன் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற ஆலைகளில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றனவா, சீன பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து கடந்த மாதம் ஜூன் 15-ம் தேதி முதல் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதேபோல் அனைத்து ஆலைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலக உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்களும் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து,  அனைத்து ஆலைகளிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில், பெரிய ஆலைகளில் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் ஆய்வு மேற்கொண்டு குறிப்பிட்ட விதிமுறையை கடைபிடிக்காவிட்டாலும், சரி செய்வதற்கு கால அவகாசம் வழங்குகின்றனர். அவ்வகையில் இதுவரையில் விதிமுறை மீறல்களுடன் இயங்கியதாக மாவட்ட வருவாய் அலுவலக உரிமம் பெற்ற 40 ஆலைகளுக்கும், 31 பெரிய பட்டாசு ஆலைகளுக்கும் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆலைகளை ஆய்வு செய்வதிலும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், இதனால் பட்டாசு உற்பத்தி மற்றும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலக உரிமம் பெற்ற சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி கூறுகையில், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையினர் பெரிய ஆலைகளில் விதிமுறைகளை சரி செய்வதற்கு கால அவகாசம் வழங்குகின்றனர். அதேபோல், சிறிய பட்டாசு ஆலைகளில் சிறு விதிமுறை மீறல் இருந்தாலும் சரி செய்வதற்கு கால அவகாசம் வழங்காமல் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர். அதோடு,  ஆலைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுப்பதால் வியாபாரமும் பாதிக்கும். அதேபோல் வியாபாரிகளிடமிருந்து வரும் முன்பணம் கிடைக்காத வகையிலும், பட்டாசு உற்பத்தியை சீர்குலைக்கும் வகையிலேயே நடவடிக்கை இருக்கிறது. எனவே சிறிய ஆலைகளிலும் விதிமுறைகளை சரி செய்வதற்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com