

விருதுநகரில் தனியார் பள்ளியில் கணிப்பொறி பிரிவில் படித்த மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க வலியுறுத்தி பெற்றோர்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலச்சின்னையாபுரம் தேவசகாயம் அன்னம்மாள் மேல்நிலைப்பள்ளிகளில் அனைவருக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இப்பள்ளிகளில் சுயநிதி பாடப்பிரிவுகளில் கணிப்பொறி பிரிவு எடுத்து படித்த மாணவிகளுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து பெற்றோர்களுடன் வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதையடுத்து அப்பகுதியில் இருந்த போலீஸார் விரைந்து வந்து மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதையடுத்து பெற்றோர்களுடன் மாணவிகள் நேரில் சென்று ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாங்கள் குறிப்பிட்ட பள்ளிகளில் சுயநிதி பிரிவில் கணிப்பொறியியல் படித்தோம். ஆனால், எங்கள் பள்ளியில் அனைத்து பிரிவுகளிலும் படித்த மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினிகள் விநியோகம் செய்யப்பட்டன.
இதேபோல் கேவிஎஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த 75 மாணவிகளுக்கும், தேவசகாயம் அன்னத்தாயம்மாள் பள்ளியில் படித்த 29 பேருக்கும் மட்டும் வழங்கப்படவில்லை. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. அதனால், அனைவருக்கும் வழங்கியது போல், எங்களுக்கும் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
உடனே, ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் பார்வையிட்டு சுயநிதி பிரிவில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச திட்டத்தில் மடிக்கணினி வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமாருக்கு நடவடிக்கை எடுக்கும் படி பரிந்துரை செய்தார். இது தொடர்பாக அரசுக்கு தெரிவித்து மடிக்கணிகள் பெற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.