

விருதுநகரை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு உடனே வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தெற்கு ஒன்றியத் தலைவர் துரைக்கண்ணு, வடக்கு ஒன்றியத் தலைவர் மங்கையர்க்கரசி ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றிய துணைத் தலைவர் முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் விஜயமுருகன், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் பொருளாளர் எம்.முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரை வழங்கி பேசினார்கள்.
இதில், இம்மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து 1 ஏக்கருக்கு நெல் பயிருக்கு ரூ.15 ஆயிரமும், தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ.25 ஆயிரமும் மற்றும் மானாவாரி பயிர்களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் வழங்கப்படும் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வங்கிகளில் சிறு, குறு விவசாயிகளின் பெற்ற கடனை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் பகுதி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.