விருதுநகர் அருகே பலசரக்கு வியாபாரி வீட்டில் ஆடுகளை திருட முயன்ற 4 பேர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விருதுநகர் அருகே பாண்டியன் நகர் காந்தி தெருவைச் சேர்ந்தவர் டேவிட்குமார்(30). இவர் வீடு அருகே பலசரக்கு கடை நடத்தி வருகிறார். அதற்கருகே உள்ள கொட்டகையில் 5 ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு வழக்கம் போல் கடைகளை அடைத்து விட்டு வீட்டிற்குள் தூங்க சென்றாராம். அதையடுத்து, நள்ளிரவில் திடீரென ஆடுகள் கதறியுள்ளன. இதையடுத்து தூக்கத்தில் இருந்து எழுந்து கொட்டைகைக்கு வந்து பார்த்தாராம். அப்போது, 4 பேர் ஆடுகளின் கயிறை அறுத்து திருட முயற்சித்து கொண்டிருந்தனர். இதையடுத்து உடனே சத்தம் போட்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்களை அழைத்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு திருட வந்தவர்கள் தப்பியோட முயற்சிக்கும் போது சுற்றி வளைத்து பொதுமக்கள் பிடித்தனர்.
பின்னர் அருகில் உள்ள பாண்டியன் நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று 4 பேரையும் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை செய்ததில் சொக்கலிங்கம்பட்டி மகாலிங்கம்(34), மதுரை அச்சம் பத்து பகுதியைச் சேர்ந்த முத்துசாமி(30), பாண்டியன் நகர் அய்யனார்(35) மற்றும் விருதுநகரைச் சேர்ந்த மணிகண்டன்(29) என்கிற விவரம் தெரியவந்தது. ஆடுகளை திருட முயற்சி செய்த 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.