விருதுநகர் அருகே கருந்திரி கூடாரத்தில் ஏற்பட்ட வெடிவிபத்துச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து அனுமதியின்றி கூடாரம் அமைத்து கருந்திரி தயாரிப்பில் ஈடுபட்ட அதிமுக வட்டார ஊராட்சி உறுப்பினர் உள்பட 3 பேர் மீது ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் அருகே ஒண்டிப்புலிநாயக்கனூர் கம்மாபட்டியில் மீனாட்சிசுந்தரம், ஐயப்பன், ஆசிர்வாதம் ஆகியோர் அருகருகே கூடாரம் அமைத்து பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகளை தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், வெள்ளிக்கிழமை மாலையில் ஐயப்பன் என்பவருக்கு சொந்தமான ஆலையில் 3 தொழிலாளர்கள் கருந்திரிகளை உலர வைத்த பின் இரும்பு கத்தியின் மூலம் துண்டாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்களாம். அப்போது, எதிர்பாரத விதமாக உராய்வு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது.
இதில் கூடாரத்திற்குள் வைத்திருந்த கரிமருந்து குவியலில் பட்டு வெடித்துச் சிதறியது. இதில், ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த அருமைதுரை உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதையடுத்து, வெடித்து சிதறிய கற்கள் விழுந்து வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காளீஸ்வரி, காளிமுத்து மற்றும் மூதாட்டி பொன்னம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் வரையில் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கம்மாபட்டி பகுதியில் அனுமதியின்றி கருந்திரி தயார் செய்யும் கூடாரத்தை நடத்தியதாக அதிமுக வட்டார ஊராட்சி உறுப்பினர் மீனாட்சி சுந்தரம், அய்யப்பன் மற்றும் ஆசிர்வாதம் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.