காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொரும் வீடு, வீடாகச் சென்று மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும் என கட்யினரை மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேட்டுக் கொண்டார்.
விருதுநகர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் கோபாண்ணா மற்றும் மாவட்ட தலைவர் வேலாயுதம் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர செயலாளர் பாப்கான் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
இதில், மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பங்கேற்று பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் தனிமரமாக மக்களவை தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இதுவரையில் கூட்டணியைப்பற்றி கவலையில்லை. மாநில அரசு இலவசமாக நலத்திட்டங்கள் வழங்கியுள்ளதாக கூறியும், அதனால் பொதுமக்கள் நன்றியோடு இருக்க வேண்டும் எனக் கூறி அதிமுகவினர் வாக்குகள் கேட்டு வருகின்றனர். இதுபோன்ற திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா சொந்தப்பணத்தில் இருந்தா வழங்கினார். அனைத்துமே பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்பட்டது தான் என்பதை மறந்து விடக்கூடாது.
அதேபோல், காங்கிரஸ் 53 வருடங்களாக ஆட்சி செய்த பாரம்பரிய கட்சி ஆகும். பொதுமக்கள் பயனடையும் வகையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மாணவ, மாணவிகள் உயர் கல்வி பெறுவதற்கு கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு சாதனை திட்டங்களை காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் ஒவ்வொருவரும் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகள் கேளுங்கள். இதேபோல், தமிழக அரசு ராஜீவ்காந்தி கொலைக்குற்றவாளிகளை விடுதலை செய்ய துணை நிற்பது நியாயம்தானா என எடுத்துக் கூறுங்கள். ஒவ்வொரு வாக்குச் சாவடி மையத்திற்கும் உள்பட்ட பகுதிகளில் கட்சியினர்களை சந்தித்து விளக்கமாக எடுத்துரைத்து வாக்களிக்க செய்ய வேண்டும் என மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் விருதுநகர் மக்களவை தொகுதியைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.