விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரதட்சணை வழக்கை விசாரிக்காத போலீஸாரை கண்டித்து குடும்பத்தோடு திங்கள்கிழமை தீக்குளிக்க வந்த குடும்பத்தினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்-காளியம்மாள் தம்பதியரின் மகள் பொன்மணி(24). இவருக்கும் ராஜபாளையம் அருகே கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி-காசிநாடார் தம்பதியரின் மகன் ஜெயராம்(28) என்பவருக்கும் கடந்த 2010ல் ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்தின் போது பெண் வீட்டார் 20 சவரன் நகையும், ரொக்கம் ரூ.60 ஆயிரமும் குடியிருந்த வீட்டை விற்பனை செய்து வரதட்சணையாக கொடுத்தனர்.
இவர்கள் இருவருக்கும் திருமணம் நாள் முதல் பிரச்னை இருந்துள்ளது. தற்போது இருவரும் இரண்டு ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், ரூ.1 லட்சம் பணம் கொண்டு வந்தால் தான் வாழ முடியும் எனவும், இல்லையென்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகின்றனாராம். இது தொடர்பாக ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதேபோல், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரையில் எவ்வித நடவடி்ககையும் எடுக்கப்படவில்லை. இதனால் வெறுப்படைந்த நிலையில் பொன்மணி, பெற்றோர்கள், தம்பி மற்றும் பாட்டி ஆகியோருடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் தீக்குளிக்க வந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் காவலர்கள் தடுத்தனர்.
இது தொடர்பாக பொன்மணி கூறுகையில், கணவர் வீட்டார்கள் வரதட்சணை கேட்டு தொல்லை படுத்துகிறார்கள். ஏற்கனவே எனது தாய் தந்தை வீட்டை விற்றுதான் திருமணம் நடத்தி வைத்தனர். ஆனால், எனது கணவரும், மாமியார் வீட்டாரும் கொடுமைப்படுத்தியதால் என்னால் வாழமுடியாத நிலை இருக்கிறது. அதனால் எனது வழக்கை விசாரணை செய்து விவகாரத்து செய்யவும், எனக்கு சீதனமாக கொடுத்த நகை, ரொக்கம் ஆகியவைகளை திருப்பி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.