விருதுநகர் மாவட்டத்தில் திருமண அரங்குகள் மற்றும் சமுதாயக் கூடங்களில் திருமணம், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தின் போதும், கூட்டங்கள் நடத்தும் போதும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மாவட்டப் பகுதிகளிலும், கிராமங்களிலும் உள்ள சமுதாயக் கூடம், திருமண அரங்கங்கள், கலையரங்கம் ஆகியவைகளில் அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு இலவசங்கள் மற்றும் பணம் கொடுத்தல் போன்றவைகள் கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் திருமண அரங்கம், கலையரங்கம் உள்ளிட்டவைகளை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு வட்டாரப் பகுதியிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் மூலம் கண்காணிப்பதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அரங்குகளில் திருமணம் மற்றும் சமுதாய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அதற்கான ஆதாரங்களுடன் கிராம நிர்வாக அலுவலர்களிடம் அணுகி அனுமதி பெற வேண்டும். அதற்கு பின் நிகழ்ச்சிகளை நடத்திக் கொ்ள்ளலாம். அரசியல் கட்சியினர் வேட்பாளர் அறிமுக கூட்டம், செயல்வீரர் கூட்டங்கள் நடத்துவதற்கும் உரிய அனுமதி பெற வேண்டும்.
இந்த அரங்குகளில் தேர்தல் விதிமுறை மீறி கூட்டம் கூட்டப்படுகிறதா என்பது குறித்து ஒவ்வொரு நாளும் ஆய்வு செய்து மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் அனுப்பி வைக்க வேண்டும். விதிமுறை மீறல் சம்பவங்கள் நடந்தால் உடனுக்கு உடன் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.