

விருதுநகர் அருகே இருபிரிவினரிடையே முன்விரோதம் காரணமாக வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கோயில் பிரச்னையை தீர்த்து வைக்கவும் வலியுறுத்தி ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் செவ்வாய்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே உள்ளது குல்லூர்சந்தை கிராமம். இங்குள்ள சௌடாம்பிகா அம்மன் கோயில், காளியம்மன் கோயிலில் வழிபாடு செய்வது தொடர்பாக இரு பிரிவினரிடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இக்கிராமத்தில் ஒரு தரப்பைச் சேர்ந்த இளைஞர் தகராறு செய்தார் என சூலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்களாம். இதையறிந்த அத்தரப்பினர் உடனே காவல் நிலையத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அழைத்துச் சென்றனர். இங்குள்ள மற்றொரு தரப்பினரின் தூண்டுதலால் தான் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்பது அறிந்து ஆத்திரம் அடைந்தனர். அதனால், மற்றொரு குடியிருப்பு பகுதிகளில் கல்வீச்சு சம்பவத்திலும் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் ஒரு தரப்பைச் சேர்ந்த 21 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். குல்லூர்சந்தையில் மற்றொரு தரப்பினர் நடத்தும் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளை வரவிடாமல் தடுக்கின்றனர். அதோடு, வழக்குகளை திரும்ப பெறவும் வேண்டும் எனக் கோரி திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து ஒரு தரப்பினரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். காவல் துறை போலீஸாரிடம் திருக்கோயில் பிரச்னையை தீர்த்து வைத்து திருவிழா நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் 5 பேரை ஆட்சியரிடம் அனுப்பியதில் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.