விருதுநகர் அருகே திருவிழாவில் இளம்பெண்ணை கேலி செய்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக இரண்டு கோஷ்டியினரும் கொடுத்த புகாரின் பேரில் 15 பேர் மீது வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ளது ஆவுடையாபுரம் கிராமம். இங்கு மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் உள்ள போரூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த மாரிமுத்து குடும்பத்தினருடன் வந்திருந்தார். இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு திருவிழாவை வேடிக்கை பார்ப்பதற்காக மாரிமுத்து, அவரது மனைவி முத்துமீனா(30), மகள் அனிதா(19) ஆகியோர் சென்றார்களாம்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கத்தின் மகன் ரவி(30) உள்ளிட்ட அவரது கோஷ்டியைச் சேர்ந்த 11 பேர் சேர்ந்து அனிதாவை கேலி கிண்டல் செய்தனராம். இதை மாரிமுத்து தட்டிக் கேட்டதை அடுத்து ஆத்திரம் அடைந்த ரவி கோஷ்டியினர், அரிவாள், கம்பு உள்ளிட்டவைகளால் தாக்கியுள்ளனர். இதில், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து, தகவலை போலீஸாருக்கு தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், ரவி கோஷ்டியைச் சேர்ந்த காயம் அடைந்த தவமணியை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் முத்துமீனா கொடுத்த புகாரின் பேரில் ரவி, முத்துப்பாண்டி, துரைப்பாண்டி, கேசவன், ராமநாதன், பாலமுருகன், காளிராஜ், மாரிமுத்து, முனியாண்டி, பாண்டி உள்ளிட்ட 10 பேர் மீதும், ரவி கோஷ்டியைச் சேர்ந்த தவமணி கொடுத்த புகாரின் பேரில் மாரிமுத்து, சரவணா, ஹரி, சங்கர் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தும் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.