

விருதுநகர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆகியோர் கைப்பேசி கொண்டு செல்வதற்கு அனுமதி கிடையாது என மாவட்ட தேர்தல் அலுவலர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் தேர்தல் விதிமுறைகள் குறித்த வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆட்சியருமான டி.என்.ஹரிஹரன் பங்கேற்று பேசியதாவது:
விருதுநகர் மக்களவை தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 16-ம் தேதி வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னி கல்லூரியிலும், செந்திக்குமார நாடார் கல்லூரியிலும் நடைபெற இருக்கிறது. இந்த மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இதேபோல், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் வந்த பின், வெளியே சென்றால் மீண்டும் உள்ளே வருவதற்கு அனுமதி கிடையாது. அதேபோல், கைப்பேசி உள்ளிட்டவைகளை கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வேட்பாளர்கள், முகவர்களுக்கு விளக்கமாக ஆட்சியர் எடுத்துரைத்தார்.
இந்தக் கூட்டத்தில் காவல் கண்காணி்ப்பாளர் எஸ்.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, கோட்டாட்சியர்கள் உதயகுமார்(அருப்புக்கோட்டை), மணிவண்ணன்(சிவகாசி) ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) பவானி ஜீஜா, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நடராஜன், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.