விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துதல் தொடர்பாக அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்தில் ஆட்சியர் தலைமை வகித்து பேசியதாவது: சிறப்பு ஆசிரியருக்கான தகுதித் தேர்வு சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தேர்வு மையத்தில் 21-ம் தேதி(புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. இத்தேர்வில், மாற்றுத்திறனாளிகள் 119 பேரும், பார்வையற்றோர் 18 பேரும் என மொத்தம் 137 பேர் தேர்வு எழுத இருக்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு அறைக்கு 20 பேர் வீதம் 6 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு அறைக்கும் தலா 1 கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பார்வையற்ற தேர்வர்கள் 18 பேருக்கு 3 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு அறைக்கு 6 பேர் வீதமும், அவர் சொல்வதை எழுதுகிறவர்கள் 18 பேரும் என நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு காலை 10 மணிக்கு தொடங்கி, 2 மணி வரையில் கூடுதலாக ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மையங்களின் அறைக்கு எளிதாக செல்லும் வகையில் சாய்வு தளப்பாதை, குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.முனுசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார், விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான், துணைக் காவல் கண்காணிப்பாளர் என்.சுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.