விருதுநகரில் மின்வாரிய உதவி பொறியாளர் வீட்டின் பூட்டை பட்டப்பகலில் உடைத்து 25 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.1500 ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் சிவசங்கரன்(48). இவர் தனது மகன் செந்தில்குமாரை வீட்டில் இருக்க வைத்து விட்டு மனைவி, மகளுடன் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு மதுரைக்கு உறவினர் வீட்டிற்கு சென்றாராம். இதையடுத்து அவரது மகன் வீட்டை பாதுகாத்து வந்துள்ளார். அதேபோல், சனிக்கிழமை காலையில் இருந்து பிற்பகல் 2 மணிவரையில் வீட்டில் இருந்துள்ளார். அதையடுத்து வீட்டை பூட்டி விட்டு அடுத்த தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மதியம் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். பின் அங்கிருந்து 3 மணிக்கு திரும்பி வந்து பார்க்கையில் வீட்டின் கேட்டு மற்றும் கதவின் பூட்டு ஆகியவை உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று பார்க்கையில் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 25 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.1500 ஆகியவைகள் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மதுரையில் இருக்கும் சிவசங்கரனுக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் சிவசங்கரன் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து பீரோவை உடைத்து நகை மற்றும் ரொக்கம் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.