

விருதுநகர் அருகே திருக்கோவிலுக்கு வரும் பாதையை ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் எழுப்பும் தனி நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோவில் நிர்வாகத்தினர் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து ஸ்ரீகற்குவேல் அய்யனார் திருக்கோவிலின் பங்காளிகள் சார்பாக செயலாளர் சி.அசோகன் மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
விருதுநகர் மீனாட்சிபுரம் அருகே ஸ்ரீகற்குவேல் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோயிலை பல்வேறு சமுதாயத்தினர் அடங்கிய 800 தலைக்கட்டுக்கள் குலதெய்வமாக வழிபாடு நடத்தியும் வருகின்றனர். மேலும், இக்கோயில் அமைந்துள்ள 1 ஏக்கர் இடத்தை, தனியாரிடம் இருந்து வாங்கி திருத்தங்கல் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவு செய்துள்ளோம். அதோடு, சப்-டிவிஷனும் செய்து அதன் அடிப்படையிலேயே திருக்கோயில் அமைத்து கடந்த 7 ஆண்டுகளாக பிரச்னையின்றி வழிபாடு செய்து வருகிறோம்.
இந்நிலையில் எங்களுக்கு எவ்வித அறிவிப்பும் கொடுக்காமல் 684எ2 என்பதை, 684எ1பி ஆக சப்-டிவிஷன் செய்யப்பட்டு சிவகாசியைச் சேர்ந்த எம்.முரளி மனோஜ் என்பவரது பேரில் கடந்த 25.9.2012ல் விருதுநகர் வட்டாச்சியரால் பட்டா மாறுதல் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எங்கள் கவனத்துக்கு வந்ததும் உடனே பட்டாவை ரத்து செய்யும் படி அருப்புக்கோட்டை கோட்டாட்சியருக்கு புகார் மனு அளித்த நிலையில் விசாரிக்காமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் திருக்கோவிலுக்கு வரும் பாதையை முரளி மனோஜ், அவரது உறவினர்களின் தூண்டுதலின் பேரில் சுற்றுச் சுவர் எழுப்புதவதற்கு பள்ளம் தோண்டி வருகிறார்.
இது குறித்து பங்காளிகள் கவனத்துக்கு வரவே உடனே தடுத்து விட்டோம். எனவே கோயில் இடத்தை ஆக்கிரமித்து சுற்றுச் சுவர் எழுப்புவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் அளித்துள்ள மனுவில் அக்கோயிலின் செயலாளர் சி.அசோகன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.