வெவ்வேறு பலசரக்கு கடைகளின் பூட்டை உடைத்து 7.40 லட்சம் திருட்டு

காரியாபட்டியில் வெவ்வேறு பலசரக்கு கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.7.40 லட்சம் ரொக்கம் மற்றும் 2 தங்க மோதிரம் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக
Updated on
1 min read

காரியாபட்டியில் வெவ்வேறு பலசரக்கு கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.7.40 லட்சம் ரொக்கம் மற்றும் 2 தங்க மோதிரம் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் புயல்ராஜ்(45). இவர் மெயின் பஜாரில் பெரிய அளவிலான பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் வியாழக்கிழமை வியாபாரம் செய்து விட்டு வசூலான ரொக்கப்பணத்தை கல்லாப்பெட்டியில் பாதுகாப்பாக வைத்து பூட்டி விட்டு அருகில் உள்ள வீட்டிற்கு சென்றாராம். அதையடுத்து, வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறப்பதற்காக வந்தாராம். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு திடுக்கிட்டுள்ளார். பின்னர் திறந்து உள்ளே சென்று பார்க்கையில் கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.7 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

உடனே இது தொடர்பாக காரியாபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார், கைரேகை நிபுணர்கள் ஆகியோர் விரைந்து வந்து சோதனையிட்டனர். இது குறித்து புயல்ராஜ் போலீஸாரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து கடையின் பூட்டை உடைத்து ரொக்கப்பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: இதேபோல்,காரியாபட்டி பாண்டியன் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(48). இவர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் என்றும் போல் வியாழக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு, அன்றைய நாளில் வசூலான பணத்தை இரும்பு பெட்டியில் பாதுகாப்பாக வைத்து கடையை பூட்டி விட்டுச் சென்றாராம். பின்னர் வெள்ளிக்கிழமை காலையில் அப்பகுதியி்ல் உள்ள பொதுமக்கள் கடை உடைக்கப்பட்டிருப்பதாக ராமலிங்கத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து விரைந்து கடைக்கு  வந்துள்ளார். அப்போது, இரும்பு கம்பியால் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின் உள்ளே சென்று பார்க்கையில் இரும்பு பெட்டியை உடைத்து உள்ளேயிருந்த ரூ.40 ஆயிரம் மற்றும் இரண்டு தங்க மோதிரம் ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து ரொக்கம் மற்றும் தங்க மோதிரங்களை திருடிச் சென்றவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com