விருதுநகர் மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதால் அலுவலர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆட்சியர் டி.என்.ஹரிஹஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம்:
மாநில அரசின் முதன்மை செயலாளர், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் ஆகியோர், அந்தந்த மாவட்ட தொழில் அலுவலர்கள் மூலம் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் குறித்த முழு விவரங்களையும் கணக்கெடுப்பு செய்வதற்கு மத்திய அரசின் பொருளாதார கணக்கெடுப்பு துறையின் முதன்மை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தமிழக அரசின் மொத்த உற்பத்தித் திறனில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கு குறித்த மாதிரி கணக்கெடுப்புப் பணி நடைபெற இருக்கிறது. இப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரால் நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் முழு விவரங்களையும் இம்மாதம் முதல், தொடர்ந்து அடுத்தாண்டு ஜனவரி வரையில் கணக்கெடுப்புக்கு அணுக இருக்கின்றனர்.
இதில், நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கை திறன், மூலப் பொருள்கள், எரிபொருள், வேலைவாய்ப்பு, ஊதியம், கூலி, ஏற்றுமதி, நிலையான பொருள்கள் மதிப்பீடு, இயந்திர தளவாடங்கள் மதிப்பீடு, உற்பத்தி மற்றும் சேவை விவரங்கள், ஒட்டுமொத்த மூலதனம், கடன் பெற்ற விவரம், கடன் நிலுவை உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். புள்ளிவிவர கணக்கெடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஆகவே, கணக்கெடுப்பாளர்கள் வரும்போது சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் உண்மையான தகவல்களை அளித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.