அருப்புக்கோட்டை பகுதியில் கூட்டுறவு வங்கியில் உரங்களை விவசாயிகள் பெயர் விலைப்பட்டியலிட்டு, முறைகேடாக விற்பனை செய்த தனியார் உர விற்பனை நிலையத்தின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அருப்புக்கோட்டை பகுதியில் உர விற்பனை நிலையங்களில் அதிக விலைக்கு உரங்களை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருவதாக வேளாண்மை இணை இயக்குநருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் ஆய்வு செய்ய அருப்புக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநருக்கு உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் பந்தல்குடியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான உர விற்பனை நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், இப்கோ யூரியா உர மூடைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக மேலும் விசாரணை செய்ததில் செட்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெயரில் போலி விலைப்பட்டியலிட்டு, தனது உரக்கடையில் வைத்து விநியோகம் செய்தது கண்டறியப்பட்டது. அதில், 10 உரமூடைகள் வரையில் விநியோகம் செய்த நிலையில் மீதமுள்ள 5 மூடைகளை வேளாண்மை துறையினர் பறிமுதல் செய்தனர்.
எனவே உரவிற்பனையில் முறைகேடு செய்ததாக பந்தல்குடி ராஜேந்திரன் உர விற்பனை நிலையத்தின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல், உர விற்பனையில் முறைகேடு செய்த செட்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.