கடலூர் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 95 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் பேசினார்.
இந்திய குழந்தைகள் நலச்சங்கத்தின் கடலூர் கிளை சைல்டு லைன் 1098 திட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் குறித்த பல்துறை கலந்தாய்வுக் கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலக கலையரங்கில் நடந்த கூட்டத்திற்கு ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான காரணிகளில் மிக முக்கியமானது பெண் கல்வி தான். பெண்கள் கல்வி கற்ற சமுதாயம் தான் முன்னேறிய சமுதாயமாக கருத முடியும். இந்த அளவீட்டின்படி பார்த்தால் கடலூர் மாவட்டத்தை முன்னேறிய மாவட்டமாக பார்க்க முடியாது. இந்த நிலையை மாற்ற அனைத்துத்தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011-12ம் ஆண்டிலிருந்து நடப்பாண்டு செப்டம்பர் வரையில் 95 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில், கடலூர் வட்டத்தில் 18, பண்ருட்டி 13, குறிஞ்சிப்பாடி 10, சிதம்பரம் 13, விருத்தாச்சலம் 22, திட்டக்குடி 8, வேப்பூர் 5, காட்டுமன்னார் கோயில் 6 திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது.
இளம் வயதில் திருமணம் நடப்பதால் அவர்கள், உடல்,மனம் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் எனவே, இத்தகைய திருமணங்கள் தடுக்கப்பட வேண்டி உள்ளது. இதனை புரிந்துக் கொண்டு அனைத்துத் துறையினரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். குழந்தை திருமணம் நடைபெறாத மாவட்டமாக கடலூரை மாற்ற அனைவரும் முன்வர வேண்டும். குழந்தை திருமணம் குறித்த தகவல் தெரிய வந்தால் பொதுமக்கள் மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் சைல்டு லைனை 1098 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என்றார்.
இந்திய குழந்தைகள் நலச்சங்க தமிழக தலைவர் ஆண்டாள்தாமோதிரன், மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜெயந்திரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.