இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என மீனவர்கள் சபதமேற்க வேண்டும் :  இல. கணேசன் யோசனை

பிரச்சனைக்கு தீர்வு காணும் வரையில் இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடிக்க செல்லமாட்டோம் என மீனவர்கள் சபதமேற்க வேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் இல.
Updated on
2 min read

பிரச்சனைக்கு தீர்வு காணும் வரையில் இலங்கை எல்லை பகுதியில் மீன்பிடிக்க செல்லமாட்டோம் என மீனவர்கள் சபதமேற்க வேண்டுமென பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொதுச் செயலர் ச. வாசுதேவன் இல்லத் திருமணம் நடந்ததையொட்டி மணமக்களை வாழ்த்த வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டு கிராமத்திற்கு வருகை தந்த இல. கணேசன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:-

தமிழக மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மத்தியில் ஆளும் நரேந்திர மோதி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இருந்தபோதிலும் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வரையில் இலங்கை கடல் எல்லைக்கு சென்று மீன் பிடிக்க மாட்டோம் என மீனவர்கள் சபதம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் இலங்கை கடற்படையினரால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. இது என்னுடைய சொந்த கருத்தாகும்.

காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை தவறு. அது ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். கர்நாடக அரசு ஒப்பந்தத்தை மீறக்கூடாது.  நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.  காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மகாநதி - கோதாவரி - கிருஷ்ணா நதிகளை இணைத்து நேரடியாக ஒகேனக்கல் கொண்டு வர வேண்டும்.   அப்பொழுது தான் காவிரி பிரச்சனை தீரும்.  இதற்கான திட்டத்தை மத்திய அரசு தன்னுடைய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.  அது விரைவில் நிறைவேற வேண்டுமென்பது தான் எங்களுடைய கோரிக்கையும் ஆகும்.

ரயில் நிலையங்கள் தனியார் மயமாக்க வேண்டுமென்ற மத்திய அரசின் முடிவு வரவேற்கக் கூடிய ஒன்றாகும். வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது பார்த்தபோது ரயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்பட்டு, வணிக வளாகங்களாக செயல்பட்டு வருகின்றன. அதனால் இந்தியாவில் முதலில் ரயில் நிலையங்கள் நவீன மயமாக வேண்டும்.  ரயில் நிலையங்களில் வணிக வளாகங்கள் ஏற்படுத்தப்படும்.  தொடர்ந்து அவை தனியார் மயமாக்கப்பட வேண்டும்.  அப்பொழுது அதிக வருவாய் ரயில்வே துறைக்கு கிடைக்கும்.  வருவாய் அதிகமாக கிடைக்கும் பொழுது ரயில் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது.  அதனால் பயணிகள் பயனடைவார்கள்.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே கனிம வள முறைகேடுகள் மட்டுமல்லாது, இயற்கை வளங்களும் தொடர்ந்து சுரண்டப்பட்டு தான் வந்திருக்கின்றன.  அதிமுக ஏற்கனவே ஆட்சியில் இருந்த போதிலும் சரி,  நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியிலிருந்து விலகி, புதிய முதல்வர் பதவியேற்ற பிறகு நடைபெற்று வரும் ஆட்சியிலும் ஊழலும், முறைகேடுகளும் நடைபெறவே இல்லை என்று  அதிமுகவால் உத்தரவாதத்துடன் கூற முடியுமா என்று நான் கேள்வி எழுப்புகிறேன்.  முத்திரை குத்தப்பட்ட ஊழல் கட்சி காங்கிரஸ்.  2ஜி ஊழலில் சிக்கியுள்ள திமுக தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றது.   அதனால் வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களிடையே ஊழல், முறைகேடுகளை முன்னிறுத்தி ஆதரவு கோருவோம்.  பொதுமக்கள் எங்களுக்கு கண்டிபாக ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

வடமாநில பள்ளிகளில் திருவள்ளுவர் தினத்தை கொண்டாட நடவடிக்கை எடுப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி அறிவித்துள்ளார்.  அதற்காக நன்றி தெரிவிக்க சென்றபோது மகாகவி பாரதியாருடைய பிறந்த நாளையும் கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.  இது சம்பந்தமாக பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.   மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான டிச.11-ம் தேதி புதுதில்லியில் உள்ள சிலைக்கு நரேந்திரமாடி மாலை அணிவிக்க வேண்டும் அல்லது அவரது தொகுதியான வாரணாசியில் பாரதியார் தங்கியிருந்த இடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென அக்கடிதத்தில் மோடிக்கு கோரிக்கை விடுத்திருக்கிறேன். அவ்வாறு செய்யும் பட்சத்தில் பாரதியார் தேசிய கவியாக போற்றப்படுவார்.

தமிழக பாஜக கூட்டணியிலிருந்து வைகோ தானாகவே வெளியேற வேண்டுமென சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சுப்பிரமணிய சுவாமி எப்பொழுதுமே சுதந்திரமாக பேசக்கூடியவர்.  அவர் பேசியதற்கு நான் எதுவும் கருத்து கூற முடியாது.  எதிர்கட்சிகளே கூட பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்க தயக்கம் காட்டுகின்றன.  கூட்டணி கட்சிகள் விமர்சிக்க கூடாது என்று கூறவில்லை.  ஆனால் கூட்டணயில் இருந்து கொண்டு விமர்சிப்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி குறித்து இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.  அவ்வாறு முடிவு எடுக்கப்பட்டாலோ அல்லது மாற்றம் ஏதேனும் இருந்தாலோ கண்டிப்பாக உங்களிடம் தெரிவிப்போம் என அவர் கூறினார்.

வேலூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் கொ. வெங்கடேசன், வேலூர் கோட்ட அமைப்பு செயலர் எஸ். குணசேகரன், மாவட்ட செயலர் எம். தண்டாயுதபாணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வெள்ளக்குட்டை க. சிவப்பிரகாசம், மாவட்ட எஸ்சி அணி தலைவர் எம். குப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com