ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரும் விதமாக காரைக்கால் மாவட்ட அதிமுக சனிக்கிழமை அழைப்புவிடுத்திருந்த பந்த் முழுமையாக நடைபெறுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை விடுதலை செய்யக்கோரி காரைக்கால் மாவட்ட அதிமுக வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது.
போராட்டத்தின் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் முழு பந்த் சனிக்கிழமை நடத்தப்படுகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதை ஏற்று வணிகர்கள் காரைக்காலில் முழுமையாக கடைகளை அடைத்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. காரைக்கால் மாவட்ட செயலர் எம்.வி.ஓமலிங்கம் தலைமையில் கட்சியினர் இருசக்கர வாகனத்தில் நகரின் பல பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். போலீஸார் ஆங்காங்கே நின்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரிலும் பிற பகுதியிலும் போலீஸார் ரோந்துப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை ஸ்ரீ சனீஸ்வரபகவானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். வெளியூலிரிலிருந்து காரைக்காலுக்கு பேருந்து இயக்கம் இல்லாததால், பக்தர்கள் கோயிலுக்கு வரமுடியாமல் ஆங்காங்கே தவிப்புக்குள்ளாகியுள்ளனர். சுற்றுலாப் பேருந்து, வேன், கார்களில் வருவோர் மட்டுமே திருநள்ளாறை அடையமுடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.