விருதுநகர் அருகே குடிநீர் வழங்காமல் இருக்கும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம பொதுமகக்ள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
சிவகாசி அருகே மணியம்பட்டி கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்வதை அக்கிராம ஊராட்சி நிர்வாகத்தினர் தடுத்து வருவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த சூலக்கரை போலீஸார் பொதுமக்களை தடுத்து நிறுத்தினார்கள். அதன் பின்னர் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மணியம்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: இக்கிராம ஊராட்சியில் ஊராம்பட்டி, பர்மா காலனி, சின்னப்பொட்டல்பட்டி, அம்மாபட்டி, நாகேஸ்வரி காலனி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய பெரிய ஊராட்சியாகும். அதிலும், மணியம்பட்டியில் மேல்நிலைத் தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் குடிநீரை மற்ற கிராமங்களில் குடிநீர் தொட்டிகளில் ஏற்றி வைத்து விநியோகம் செய்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் மணியம்பட்டி கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை இருக்கிறது.
இந்த மேல்நிலைத் தொட்டியின் மோட்டார் ஆபரேட்டராக பட்டாசு ஆலை உரிமையாளரை நியமனம் செய்துள்ளனர். நேரத்திற்கு குடிநீர் மேல்நிலை தொட்டியில் மோட்டார் மூலம் நீ்ர் நிரப்பாமல் பட்டாசு ஆலை வேலையை மட்டும் செய்து வருகிறார். இதுபோன்ற காரணங்களால் 2 கி.மீ தூரத்தில் உள்ள பம்ப்செட் தோட்டத்திற்குச் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய சூழ்நிலையிருக்கிறது. எனவே நாள்தோறும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த மனு மீது ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.