விருதுநகர் எஸ்.பி.ஐ வங்கியில் போலி காசோலை கொடுத்து ரூ.7.35 லட்சம் மோசடி செய்ததாக புனேவைச் சேர்ந்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மகராஷ்டிராவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் மதுரா லைப் ஸ்டைல் என்ற தனியார் நிறுவனம் கணக்கு வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் காசோலையை போலியாக புனே அருகே உள்ள சோம்வார்பேட் பகுதியைச் சேர்ந்த மகேஷ் கனியால் தக்கார்(40) தயார் செய்துள்ளார். அதோடு, இந்த காசோலையில் ரூ.7 லட்சத்து 35 ஆயிரத்து 230 என பூர்த்தி செய்து, விருதுநகர் கச்சேரி சாலையில் பேங்க் ஆப் பரோடா வங்கியில் கலெக்சனுக்கு கொடுத்துள்ளார். மேற்குறிப்பிட்ட நபர் கொடுத்த அந்த காசோலையை விருதுநகர் பாங்க் ஆப் பரோடா வங்கி கிளையிலிருந்து, எஸ்.பி.ஐ வங்கிக்கு ஆய்விற்காக அலுவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதை எஸ்.பி.ஐ வங்கி கிளை அதிகாரிகள் சரிபார்த்து காசோலை சரியானது தான் சான்றளித்து, பின்னர் குறிப்பிட்ட பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கிலிருந்து ரூ.7.35 லட்சம் எடுத்தது தொடர்பாக குறிப்பிட்ட நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதோடு, மதுரா நிறுவன அதிகாரிகள் உடனே எஸ்.பி.ஐ வங்கி கிளைக்கு யாருக்கும் காசோலை கொடுக்கவில்லை என்றும், அந்த எண்ணுள்ள காசோலை தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்குள் மகேஷ் கனியால் தக்கார் புனேவில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் காசோலை மூலமாக ரூ.6.50 லட்சமும், ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.45 ஆயிரத்தையும் எடுத்துள்ளாராம். மேலும், இவரது கணக்கில் ரொக்கமாக ரூ.41,153 மட்டும் இருப்பு உள்ளது. எனவே போலியான காசோலை மூலம் பணம் எடுத்து மோசடி செய்ததாக எஸ்.பி.ஐ வங்கியின் மண்டல மேலாளர் நரசிம்மன், விருநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் செவ்வாய்கிழமை இரவு புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் உடனே மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து புனேவைச் சேர்ந்த மகேஷ் கனியால் தக்காரை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.