இமானுவேல்சேகரன் நினைவு தினம்: மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் வழித்தடங்களில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும்: ஆட்சியர்

தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள வழித்தடங்களில்   மட்டுமே சென்று திரும்ப வேண்டும் என ஆட்சியர் டி.என்.
Updated on
1 min read

தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள வழித்தடங்களில்   மட்டுமே சென்று திரும்ப வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.

விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினம் அனுசரிப்பது தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பிரமுகர்களுடனான குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் வருகிற 11-ம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்து செல்கின்றனர்.இதில், பங்கேற்க செல்லும் வாகனங்கள் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் வழியாக சென்று திரும்ப வேண்டும்.

காரியாபட்டி-அருப்புக்கோட்டை-விருதுநகர்-சாத்தூர்-ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி, விருதுநகர்-திருநெல்வேலி-கோவில்பட்டி-தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை- காந்தி நகர்-ராமலிங்கா மில்-திருச்சுழி-நரிக்குடி-பார்த்திபனூர் வழியாக பரமக்குடி சென்று, பின்னர் அங்கிருந்து பார்த்திபனூர்-நரிக்குடி-திருச்சுழி-ராமலிங்காமில்-காந்திநகர்-அருப்புக்கோட்டை வழியாக திரும்பி வர வேண்டும். கட்டாயம் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் செல்ல வேண்டும். இந்த வழித்தடங்களில் காவல் துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் நத்தம்பட்டி காவல் நிலையம், அல்லம்பட்டி முக்குரோடு, விருதுநகர் முக்குச்சாலை, காரியாபட்டி நகர், ஆவியூர் காவல் நிலையம், ராமலிங்கா மில்ஸ், பந்தல்குடி காவல் நிலையம், சாத்தூர் வெங்கடாஜலபுரம், திருத்தங்கல் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில், ராஜபாளையம் வன்னியம்பட்டி விலக்கு உள்ளிட்ட இடங்களில் காவல் துறையின் சார்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட இருக்கிறது.அதோடு, வாகனங்களில் ஒலிபெருக்கி, சாதி கட்சி கொடிகள் கட்டிக் கொண்டு செல்லக் கூடாது. ஆயுதங்கள் எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது. மூடப்பட்ட வேன், கார்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். வாகனங்கள் மேலே அமர்ந்து செல்வதற்கு அனுமதியில்லை. அன்றைய நாளில் இம்மாவட்டத்தில் அரசு மதுபானக்கடைகள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிகழ்ச்சிக்கு செல்லும் நபர்கள் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் எழுத்து மூலமாக தகவல் தெரிவித்தால் வாகன அனுமதி சீட்டுக்கள் வழங்கவும், காவல் துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, கோட்டாட்சியர்கள் உதயகுமார்(அருப்புக்கோட்டை), மணிவண்ணன்(சிவகாசி), காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com